Ads Here

Monday, April 24, 2017

திருந்திய எழிலன்

எழிலனின் தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையும் கொடுக்க வேண்டும். உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைத் தன்மகன் படக்கூடாது என்பதற்காக எழிலனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.

எழிலன் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். ஏதோ பள்ளிக்குப் போகிறோம் என்ற கடமைக்காக அவன் பள்ளிக்குப் போவானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறை அவனுக்குச் சிறிது கூட இல்லை.

பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு, வெளியில் கிளம்பிவிடுவான். சில மாணவர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றியும், அருகில் இருந்த திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்த்தும், வயதான பெரியவர்களைக் கேலியும், கிண்டலும் செய்தும், பொய் பேசியும் வீணாக பொழுதைப் போக்கி வந்தான். மேலும் இது குறித்து அவன் ஒருநாள் கூட கவலைப்பட்டதே இல்லை.

தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான். அவர், எழிலன் ஒரே மகன் என்பதாலும் படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும் பொழுதெல்லாம் பணம் கொடுத்து வந்தார்.

எழிலன், தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.

அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. எழிலனின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.

ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

இதை பார்த்த எழிலன் கூடியிருந்தவர்களிடம், ''அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்?'' என்று கேட்டான்.

''அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள்,'' என்று கூறினர்.
பலநாள்கள் அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் மேலும் கூறினர்.

அதைக் கேட்டதும் எழிலனுக்கு உதறல் எடுத்தது. 'மற்றவர்கள் வெறுக்கும் படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும். போலிருக்கிறது,' என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான்.

அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் எழிலன் திருந்தியதைக் கண்ட அவன் தந்தையார் மகிழ்ந்தார்.

No comments:

Post a Comment