Ads Here

Wednesday, May 2, 2018

கலைக்கானகத்திலே....


Image result for கலை

விண்ணை முட்டும் மாமலைகள்
; வெள்ளியை உருக்கி ஊத்தின மாதிரி ஒழுகும் அருவிகள்; சலசலத்தபடி ஓடும் நதிகள்; நதிக்கரை எங்கும் பச்சைப் பட்டை விரிச்சது மாதிரித் தெரியும் சோலைகள்; ஓங்கி வளர்ந்த மரங்கள்...

இதுதான் கலைக்கானகம்.

விலங்குகள், பறவைகளோட உலகம்.

உயர்ந்த ஒரு மரத்தோட உச்சியில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்திச்சு. கிளிகளின் குடும்பம். பச்சைக்கிளிகளோட குடும்பம். பச்சையம்மாளோட குடும்பம்...

"அம்மா... அம்மா.. இந்தத்தடவ கலைப்போட்டியில நான் நடனமாடப் போகிறேன்''  கிளிக்குஞ்சு கனிமொழி தன் கீச்சுக் குரலில் சொல்லிச்சு

"இதென்ன புதுசா இருக்கு. நீ வழக்கமாகப் பேச்சுப் போட்டியில்தானே கலந்துக்கவே'' கனிமொழியோட அப்பா பச்சையப்பன் கேட்டார்.

" பேச்சுப் போட்டி சலிச்சுப் போச்சுப்பா... இந்தத்தடவ நான் நடனப்போட்டியில் தான் பங்கெடுப்பேன்'' கனிமொழி உறுதியாப் பேசினாள்.

"அதுக்கு உனக்கு நடனம் தெரியாதே...'' பச்சையம்மாள் கோபத்தோடு கேட்டாள்.

"நடனம் தெரியாட்டி என்ன? கத்துக்கிட்டாப் போச்சு...'' கனிமொழியும் விடாமல் பதில் சொன்னா.

"உனக்கு யாரு நடனம் சொல்லித் தருவாங்க?''

"மயிலாடும் பாறையில் இருக்கற நடனக்காரி மயிலம்மாளிடம் கேட்கலாமே...'' கனிமொழி முன்னாடியே திட்டமிட்டபடி பதில் சொன்னாள்.

பச்சையப்பன் கலைவிழா அலுவலகத்துக்குப் போனாரு. நடனப் போட்டிப் பிரிவில் தன் மகளோட பெயரைப் பதிவு செய்தார். பதிவாளர் ஒட்டகச் சிவிங்கி பச்சையப்பனைக் கேலியாகப் பாத்துச்சு. கிளிகள் எல்லாம் நடனப்போட்டியில் பங்கெடுத்து வெற்றிபெற முடியுமா? அப்படீண்ணு கேட்கற மாதிரி இருந்திச்சு அந்தப் பார்வை

கனிமொழியும், பச்சையப்பனும் மயிலாடும் பாறையை நோக்கிப் பறந்தாங்க.

அங்கே.. மயிலம்மாள் ஒய்யாரமாக நடந்திட்டுகிருந்தாங்க..

" ம்.... உங்களுக்கு என்ன வேணும்...?'' மயிலம்மாள் கேட்டாங்க

"இவ பேரு கனிமொழி. என்னோட மகள். வருகிற கலைவிழாவில நடனப் போட்டியில் பங்கெடுக்கணும் ஆசைப்படறா. அதுதான் உங்க கிட்ட நடனம் கத்துக்கலாம்ணு வந்திருக்கிறா''  பச்சையப்பன் சொல்லச் சொல்ல மயிலம்மாள் தன் கரகரப்பான குரல்லெ சிரிச்சாங்க. மயிலாடும் பாறையே அதிரும்படி இருந்தது அச்சிரிப்பு

"ஒரு கோழி முட்டையோட அளவு கூட இல்லை. இவளெல்லாம் நடனமாடப் போறாளாம்... முதல்ல இங்கிருந்து ஓடிப் போங்கள். எடத்தைக் காலிபண்ணுங்க. நான் ஏதாவது செஞ்சுடுவேன்'' மயில் கிளிகளைக் கொத்த வர்றது மாதிரி பாஞ்சு வந்திச்சு.

பச்சையப்பனும் கனிமொழியும் கவலையோடு வீடு திரும்பினாங்க. நடந்ததை எல்லாம் பச்சையம்மாள்கிட்ட சொன்னாங்க.
.
"பெயரையும் பதிவு செஞ்சுட்டோம். நடனமாடாவிட்டால் நம் குடும்பத்திற்கே அவமானமாகிவிடுமே... இப்ப என்ன செய்யறது? '' மூணுபேரும் கவலையோடு கன்னத்தில் கை வைத்து யோசிச்சாங்க.

அப்போ அவர்களுடைய குடும்ப நண்பர் கருப்பண்ணன் காகம் அங்கு வந்தாரு. நீங்க எல்லாம் ஏன் கவலையா இருக்கீங்கண்ணு கேட்டாரு. பச்சையப்பன் நடந்த்தையெல்லாம் கருப்பண்ணன்கிட்ட சொன்னாரு.

"ப்பூ.. இவ்வளவுதானா. கவலையை விடுங்க. நான் ஒரு வழி சொல்கிறேன்... மயிலாடும் பாறைக்கு அருகே ஒரு பெரிய புங்கை மரம் இருக்குது. உங்க வீட்டை அந்த மரத்துக்கு மாத்திங்கங்க. அங்கிருந்து பாத்தா மயிலம்மாள் நடனமாடுவது தெரியும். கனிமொழி அதைப் பார்த்துக் கத்துக்கிடட்டும் அப்படீண்ணு சொல்லிச்சு கருப்பண்ணன் காகம்.

"ஆகா அருமையான திட்டம்" அப்படீண்ணு சொல்கிட்டே கனிமொழி கருப்பண்ணனின் கழுத்தைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துச்சு.

அப்புறம் என்ன? அடுத்த நாளே பச்சையப்பனின் குடும்பம் மயிலாடும் பாறைக்கு மாறிச்சு.

மயிலம்மாள் நடனமாடுவதை கனிமொழி கவனமாகப் பார்த்திச்சு. கால்களை எப்படி வைக்கணும் உடலை எப்படி அசைக்கணும்? முகத்தை எப்படி வச்சுக்கணும்? அப்படீண்ணு ஒவ்வொண்ணையும் கவனமாகப் பார்த்திச்சு.. அது போல் செய்து பழகிச்சு. பச்சையப்பனும் பச்சையம்மாளும் கனிமொழிக்குத் தேவையான உதவியெல்லாம் செஞ்சாங்க.

"மயில் ஆடற மாதிரியே நீயும் ஆடணும்ணு இல்ல. ஒண்ணோட நடனத்தில சில மாத்தங்கள செய்துக்கோ" அப்படீண்ணு பச்சையப்பன் சொன்னாரு காலை, மாலை, மதியம்ணு நேரம் காலம் பாக்காமல் கனிமொழி பயிற்சி செய்தா.

ஆடி ஆடி கிளிக்குஞ்சோட கால்கள் களைச்சுப் போச்சு. இருந்தாலும் பயிற்சி எடுப்பதை நிறுத்தல.

அப்படி இருக்க கலைவிழாவும் வந்துச்சு. கண்ணாடிக் குளக்கரைக்கு அருகிலிருக்கற பெரிய திடல்ல தான் போட்டிகள் நடக்குது. கலைக்கானகத்திலுள்ள எல்லா விலங்குகளும் அங்கே கூடியிருந்துச்சு. பக்கத்துக் காட்டிலுள்ள சிலரும் வந்திருந்தாங்க.
.
"பார்வையாளர்களே உங்களுக்கு ஓர் அறிவிப்பு. அடுத்ததாக. நடனப் போட்டி இந்த மேடையில் நடக்கவிருக்கிறது... முதலாவதாக மயிலம்மாள்...''  ஓட்டகச் சிவிங்கி அறிவிப்பு செய்திச்சு. மயில் ஒய்யாரமாய் நடந்து வந்து மேடை ஏறிச்சு. என்னை மாதிரி நடனமாட இந்த கலைக்கானகத்தில் யார் இருக்காங்க அப்படீங்கற கர்வம் அது நடக்கறதுல தெரிஞ்சிச்சு. .

மயிலம்மாள் அந்தக் கர்வத்திலே மிக அலட்சியமாக நடனமாடிட்டு போயிருச்சு. பார்வையாளர்கள்லெ கொஞ்சம் பேர் கைதட்டிப் பாராட்டினாங்க. .

"நடனப்போட்டியில் அடுத்ததாக... புதிய போட்டியாளராக இம்முறை மேடையேறுகிறார்.... கனிமொழி...''  ஓட்டகச் சிவிங்கி அறிவித்தது.

"என்ன கனிமொழி நடனமாடுகிறாளா? பேச்சுப் போட்டியிலதானே வழக்கமாக பங்கெடுப்பா. இந்தத் தடவை நடனப்பபோட்டியில கலந்துக்கறா. கனிமொழிக்கு நடனமாடவும் தெரியுமா? அவளுக்கு வழக்கமா கெடக்கற ஒரு பரிசும் கெடைக்காம போகப்போகுது" பார்வையாளர்கள்ல சிலர் பேசிக்கிட்டாங்க.

ஆனா வெற கொஞ்சம் பேர் "அட பரவாயில்லையே கனிமொழி  நடனப்போட்டியில் கலந்துக்கிறாளே" அப்படீண்ணு உற்சாகமாக நடனத்தைப் பாக்க ஆரம்பிச்சாங்க. எல்லாரோட கண்களும் மேடையிலே இருந்துச்சு.

கனிமொழி போட்டி நடக்கும் திடலைச் சுத்தி ஒரு முறை பறந்துட்டு சர்ணு மேடையில் இறங்கினாள். காத்தாடி சுத்தறமாதிரி போல் தலைகீழாகச் சுழன்றுகிட்டே அவ மேடையிலே எறங்கினது எல்லாருக்கும் புடிச்சுப் போச்சு. பார்வையாளர்கள்ல நெறயப் பேரு எழுந்து நிண்ணனு கை தட்டினாங்க. மயிலு மட்டும் எழுந்து நிக்கவும் இல்லை கையும் தட்டல.

கனிமொழி ஆடத் தொடங்கினாள். வளைஞ்சு நெளிஞ்சு ஆடின.  குனிஞ்சு நிமிந்து, ஆடினாள். மேடையில் பம்பரம் மாதிரிச் சுத்தினா. ஒத்தைக்கால்ல நடனம் ஆடினாள். சிறகை மேடையில ஊன்றிகிட்டு ஒடம்பை மேல தூக்கிக்கிட்டு ஆடினாள்.

கடைசியா ஆட்டத்தை முடிச்சுகிட்டு எல்லாரையும் தலைதாழ்த்தி வணங்கினாள். அவ்வளவுதான் கலைக்கானகமே அதிரும்படி கைதட்டற சத்தம் கேட்டிச்சு. சிலர் ஓடி வந்து கனிமொழியின் கைகளைப் பிடித்து குலுக்கிப் பாராட்டைத் தெரிவிச்சாங்க..

நடனப்போட்டில முதல் பரிசு கனிமொழிக்குத்தான்ணு தனியாகச் சொல்ல வேண்டாம் இல்லையா?

No comments:

Post a Comment